தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற திருமருகல் குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில், திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பாக விளையாடி முதல் இடத்தைப் பெற்று அசத்தினர்.
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடம் பெற்று, நாகப்பட்டினம் மாவட்ட அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றது.
மேலும், 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அப்பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், பள்ளித் தலைமை ஆசிரியர் குமார், உதவி தலைமை ஆசிரியர் சுகுமாரன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கவிதா, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் அன்பானந்தம், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சௌரிராஜன் மற்றும் லெனின் ஆகியோரையும் பாராட்டினர்.

