திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து, லட்சக்கணக்கான லிட்டர் தூய்மையான குடிநீர் வீணாக சாக்கடையில் கலந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. அதிகாரிகளின் இந்த அலட்சியப் போக்கு பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாக்கடையில் வீணாகும் குடிநீர்:
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம், 10-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் ரோடு, ரெயின்போ பேக்கரி மற்றும் ஸ்ரீ கந்தன் கிளினிக் எதிரில் பிரதான குடிநீர் குழாயில் பயங்கர உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த பல நாட்களாக லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி, அருகில் உள்ள சாக்கடைக் கால்வாயில் வீணாகக் கலந்து வருகிறது.
இப்பகுதியின் வழியே மாநகராட்சி அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தினமும் சென்று வருகின்ற போதிலும், யாரும் இந்த அவலத்தைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கோடைக் காலத்தில் பொதுமக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில், இப்படித் தூய்மையான குடிநீர் பல நாட்களாக வீணாவதை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாட்ஸ்அப் புகாரில் விசித்திர குளறுபடி:
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் (WhatsApp) புகார் எண்ணிற்குத் தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர். ஆனால், அங்குதான் ஒரு விசித்திரமான தொழில்நுட்பக் குளறுபடி அரங்கேறி வருகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்கு அனுப்பப்படும் புகார்கள், தொழில்நுட்பத் தவறு காரணமாக திருச்சி மாநகராட்சிக்குச் சென்று விடுகிறது. திருப்பூர் பிரச்சினையைப் பார்த்து அதிர்ச்சியடையும் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், புகார் செய்த சமூக ஆர்வலர்களைத் தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்கும் அவல நிலை நீடிக்கிறது.
சமூக ஆர்வலர்களின் கேள்வி:
“தொடர்ச்சியாக நாங்கள் திருப்பூர் மாநகராட்சிக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் அளித்து வருவதால், திட்டமிட்டு எங்களது எண்கள் முடக்கப்படுகிறதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா? திருப்பூர் மாநகராட்சிக்கு அனுப்பும் புகார் எப்படி திருச்சி மாநகராட்சிக்குச் செல்கிறது? இது யாருடைய தவறு என்பதை உயர்மட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்.”
எனவே, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
- ஆத்துப்பாளையம் சாலையில் உடைந்துள்ள குடிநீர் குழாயை உடனடியாகப் பழுதுநீக்கி, குடிநீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.
- மாநகராட்சியின் வாட்ஸ்அப் புகார் எண் அமைப்பில் உள்ள குளறுபடிகளைக் களைந்து, பொதுமக்களின் புகார்கள் உரிய அதிகாரிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
இனிமேலும் அலட்சியம் காட்டாமல், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

