நாகை மாவட்டம் பனங்குடி ஊராட்சியில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் (CPCL) ஆலை விரிவாக்கத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கக் கோரி புதுச்சேரி – தமிழக எல்லையான வாஞ்சூரில் 500-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இவ்வாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 31,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதற்காக விவசாயிகளிடமிருந்து 620 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நில உரிமையாளர்கள், குத்தகை சாகுபடிதாரர்கள் மற்றும் விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ. 5 லட்சம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.இதற்காக மொத்தம் 2,163 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதியை சிபிசிஎல் நிறுவனம் தமிழக அரசிடம் ஏற்கனவே ஒப்படைத்துள்ளது.

தமிழக அரசிடம் நிதி ஒப்படைக்கப்பட்ட நிலையிலும், தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது மிகக் குறைந்த அளவிலான பயனாளிகளுக்கு மட்டுமே வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை வரவு வைக்கப்பட்டு வருவதாகவும், ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்ட 2,163 பயனாளிகள் அனைவருக்கும் உடனடியாக முழுத் தொகையையும் தமிழக அரசு அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றும் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர்.

மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட பயனாளிகள் 500-க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி - தமிழக எல்லையான வாஞ்சூர் ரவுண்டானா பகுதியில் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த போராட்டம் தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால் நாகப்பட்டினம் – சிதம்பரம் சாலை,நாகப்பட்டினம் – கும்பகோணம் சாலை ஆகிய முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

பேச்சுவார்த்தை தோல்வி - பொதுமக்கள் கைது

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு (DSP) ராமச்சந்திர மூர்த்தி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

“அனைத்து பயனாளிகளுக்கும் உடனே தொகை வழங்கப்பட வேண்டும்” என்பதில் பொதுமக்கள் உறுதியாக இருந்ததால், அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version