தமிழகத்தில் சமீபகாலமாகப் பிரபலமான மற்றும் முன்னணி ஊடகங்களின் பெயர்களைச் சற்றே மாற்றியோ அல்லது சுருக்கியோ (Short Forms) பயன்படுத்தி, சிலர் பல்வேறு தவறான நடவடிக்கைகளிலும் மோசடிகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இத்தகைய போலிப் பத்திரிகைகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஊடகங்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் குறித்து, பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தற்போது தீவிரமடைந்துள்ளது.

1 லட்சம் பத்திரிகைகள் முடக்கம் பின்னணி

மத்திய அரசின் பத்திரிகை பதிவு அலுவலகம் (PRGI – Press Registrar General of India / RNI) விதிகளின்படி, தகுந்த ஆவணங்கள் மற்றும் வருடாந்திர விதிமுறைகளைப் பின்பற்றாத சுமார் ஒரு லட்சம் பத்திரிகைகளின் பதிவுகள் தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது PRGI அமைப்பால் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, நேரடிப் பதிவில் உள்ள பத்திரிகைகள் மட்டுமே சட்டப்பூர்வமாகச் செயல்பட அனுமதி உண்டு. இந்த அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம்பெறாத மொட்டைக் கடிதாசி அமைப்புகள், போலி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் பெயர்களைப் பயன்படுத்திப் பலர் பல்வேறு முறேகடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெயர்ச் சுருக்க மோசடிகளும் சட்ட விதிகளும்

ஒரு பத்திரிகையின் பெயரைச் சுருக்கியோ அல்லது வேறொரு நிறுவனத்தின் பெயரைத் தவறாகத் தன்வசப்படுத்திப் பயன்படுத்துவதோ சட்டப்படி கடுமையான குற்றமாகும். ஆனால், முன்னணி ஊடகங்களின் பெயர்களைப் போலி நபர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பண மோசடி உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

PRGI-ன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத பெயர்களைத் தன்வசம் வைத்துக் கொண்டு, தங்களை “அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்” என்று கூறிக்கொண்டு ஏமாற்றும் நபர்களைப் பொதுமக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கள ஊடகவியலாளர்கள் சந்திக்கும் பெரும் பாதிப்பு

இத்தகைய சட்டவிரோதச் செயல்களால் பொதுமக்கள் ஏமாறுவது மட்டுமன்றி, அர்ப்பணிப்புடன் களத்தில் நின்று நேர்மையாகப் பணியாற்றும் உண்மையான செய்தியாளர்கள்தான் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுகிறார்கள். போலி நபர்களின் ஆதிக்கத்தால் ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர் சமூகத்தின் மீதும் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவநம்பிக்கை ஏற்படும் சூழல் உருவாகிறது. இது உண்மையான செய்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகிறது.

புதிய செய்தியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள்

இத்துறையில் உள்ள முறைகேடுகளைத் தவிர்க்கவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்தியாளர்களும் பொதுமக்களும் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

  1. நிறுவனங்களில் இணையும் முன் எச்சரிக்கை

பத்திரிகைத் துறையில் கால்பதிக்கும் புதிய செய்தியாளர்கள் அல்லது விளம்பரப் பிரிவில் இணைபவர்கள், தாங்கள் சேரவிருக்கும் நிறுவனம் முறையானதுதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம். ஒரு நிறுவனத்தில் இணையும் பொழுது, அந்தப் பத்திரிகையின் முழு பெயர் மற்றும் மத்திய அரசின் PRGI (RNI) பதிவு எண் ஆகியவற்றைத் தீர விசாரித்து, சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பெயரளவிலான அல்லது போலி முகவரிகளைக் கொண்ட அமைப்புகளில் இணைந்து தங்களின் எதிர்காலத்தைத் தொலைத்துவிடக் கூடாது.

  1. அரசுச் சலுகைகளைப் பெற முழுப் பெயர் அவசியம்

அரசு செய்தியாளர் அடையாள அட்டை (Press Pass), பேருந்துச் சலுகை, குடியிருப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற விண்ணப்பிக்கும் போது அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.

  • அரசு அலுவலகங்களில் சலுகைகள் பெற விண்ணப்பிக்கும் போது, பத்திரிகையின் பதிவு பெற்ற பெயர் முழுமையாக உள்ளதா என்பதை அறிந்து கொள்வது கட்டாயமாகும்.
  • அரசுப் பதிவேட்டில் இருக்கும் பெயரும், நீங்கள் பயன்படுத்தும் பெயரும் மாறும்பட்சத்தில் சலுகைகள் மறுக்கப்படுவதோடு சட்டப் பூர்வ நடவடிக்கைகளுக்கும் உள்ளாக நேரிடும்.
  1. பதிவைச் சரிபார்த்தல் மற்றும் புகாரளித்தல்
  • பதிவைச் சரிபார்க்கவும்: உங்களிடம் வரும் பத்திரிகையாளர்கள் அல்லது ஊடகங்களின் நம்பகத்தன்மையை அவர்களின் PRGI (RNI) பதிவு எண் மூலம் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ள முடியும்.
  • முறைகேடுகளுக்கு இடம் தராதீர்: விளம்பரங்கள், செய்திகள் வெளியிடுதல் அல்லது இதர ஆதாயங்களுக்காகப் பதிவு செய்யப்படாத போலி அமைப்புகள் அணுகினால், உடனடியாகக் காவல்துறைக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு, முறையாகப் பதிவு செய்து நடத்தப்படும் ஊடகங்களுக்கு மட்டுமே பொதுமக்கள் தங்களின் ஆதரவை வழங்க வேண்டும். போலிப் பெயர்களில் உலா வரும் நபர்களை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டியது ஆரோக்கியமான ஊடகச் சூழலுக்கு இன்றியமையாததாகும்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version