ஈரோடு மாவட்டம்,கோபி காசிபாளையத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு பதவி விலக வேண்டும் –காங்கிரஸ்
கவுன்சிலர் போர்க்கொடி
பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய மோடி அரசை கண்டித்து, காசிபாளையம் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் கே.எஸ்.கோதண்டன் இன்று நடைபெற்ற மன்ற கூட்டத்திற்கு சைக்கிளில் சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
காசிபாளையம் பேரூராட்சி மன்ற கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் கவுன்சிலர் கே.எஸ்.கோதண்டன், மத்திய அரசின் விலை உயர்வு நடவடிக்கையை கண்டித்து தனது இருசக்கர வாகனத்தை தவிர்த்து சைக்கிளில் வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய மோடி அரசு பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கிறது. விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வுக்கு முழு பொறுப்பேற்று மத்திய மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். மக்கள் துயரத்தை உணராத அரசு தேவையில்லை” என காட்டமாக தெரிவித்தார்.
மேலும், “விலையை குறைக்காமல் மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.
கவுன்சிலரின் இந்த நூதன போராட்டம் மற்றும் பேச்சு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

