கிராமப்புறங்கள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் அவ்வப்போது காணப்படும் உண்ணி காய்ச்சல் (Scrub Typhus / Tick Fever குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஓரியன்டியா சுசுகாமுஷி (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இந்தக் காய்ச்சல், நுண்ணிய உண்ணிகள் (Mites) கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.
எவ்வாறு பரவுகிறது?
புல்வெளிகள், புதர்கள், விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிகளில் காணப்படும் நுண்ணிய உண்ணிகள் எலி உள்ளிட்ட சிறு விலங்குகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகளின் உடலில் வாழ்கின்றன. இவை மனிதர்களைக் கடிக்கும்போது பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உண்ணி காய்ச்சல் உருவாகிறது.
முக்கிய அறிகுறிகள்
உண்ணி கடித்த 7 முதல் 12 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றலாம்.
* கடுமையான காய்ச்சல், உடல் நடுக்கம்
* தலைவலி, தசை வலி, உடல் சோர்வு
* தோலில் சிவப்பு நிற தடிப்புகள்
* கழுத்து, அக்குள் உள்ளிட்ட பகுதிகளில் நிணநீர் முடிச்சுகள் வீக்கம்
* உண்ணி கடித்த இடத்தில் சிகரெட் சூடு பட்டது போன்ற கருப்பு நிற தழும்பு அல்லது புண் (Eschar) ஏற்படுவது முக்கிய அறிகுறியாகும்.
இந்த அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம். சிகிச்சை தாமதமானால் கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
* புதர்கள் மற்றும் புல்வெளி பகுதிகளுக்குச் செல்லும்போது உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும்.
* வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை மற்றும் கால்நடைகளின் உடலில் உண்ணிகள் உள்ளதா என பரிசோதிக்க வேண்டும்.
* வீட்டைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* எலிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
* வனப்பகுதி அல்லது புதர் நிறைந்த பகுதிகளுக்குச் சென்று வந்த பிறகு சோப்பு போட்டு நன்றாக குளிக்க வேண்டும்.
சிகிச்சை உண்டு
உண்ணி காய்ச்சலுக்கு உரிய ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். காய்ச்சலுடன் கருப்பு நிறத் தழும்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுயமாக மருந்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

