இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டத்தின் (FCRA) கீழ் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதியாக குறைந்துள்ள நிலையில், நாட்டுக்கு வரும் வெளிநாட்டு நிதியின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015-ஆம் ஆண்டில் FCRA அனுமதியுடன் செயல்பட்ட தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 29,022 ஆக இருந்தது. இது 2024-25 நிதியாண்டில் 14,466 ஆகக் குறைந்துள்ளது.

இந்த காலகட்டத்தில் சுமார் 21,983 அமைப்புகளின் FCRA பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை ஆண்டறிக்கை மற்றும் கணக்கு விவரங்களை முறையாக தாக்கல் செய்யாத காரணத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட பதிவுகளுக்கான காரணங்கள்
அமைப்புகளின் FCRA உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதில் 91.3 சதவீதம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யாதது உள்ளிட்ட விதிமுறை மீறல்களால் ஏற்பட்டுள்ளது. 7.9 சதவீத அமைப்புகள் செயல்பாடுகள் இல்லாமல் இருந்ததாலும், 0.4 சதவீதம் சட்ட விதிமீறல்கள் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிதி அதிகரிப்பு
என்.ஜி.ஓ.க்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் நிதி அதிகரித்துள்ளது.
2015-16 நிதியாண்டில் ரூ.17,832 கோடியாக இருந்த வெளிநாட்டு நிதி வரவு, 2024-25 நிதியாண்டில் ரூ.22,974 கோடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்கா முதலிடம்
இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு அதிக அளவில் நிதி வழங்கிய நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இருந்து ரூ.12,113 கோடியும், இங்கிலாந்தில் இருந்து ரூ.2,414 கோடியும், ஜெர்மனியில் இருந்து ரூ.1,782 கோடியும் பெறப்பட்டுள்ளது.
சமூக மேம்பாட்டுக்கு அதிக நிதி
வெளிநாட்டு நிதியில் அதிகபட்சமாக சமூக மேம்பாட்டுத் துறைக்கு ரூ.13,071 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. கல்வித் துறைக்கு ரூ.6,933 கோடியும், சமய அமைப்புகளுக்கு ரூ.5,150 கோடியும், கலாச்சாரத் துறைக்கு ரூ.707 கோடியும் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு ரூ.2,313 கோடி
மாநில வாரியாக அதிக வெளிநாட்டு நிதி பெற்ற பகுதிகளில் டெல்லி ரூ.5,834 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா ரூ.3,164 கோடி, மகாராஷ்டிரம் ரூ.2,385 கோடி, தமிழ்நாடு ரூ.2,313 கோடி என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும், FCRA பதிவு பெற்ற தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2,102 அமைப்புகளுடன் முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிதியின் பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு FCRA விதிகளை கடுமையாக்கி வருகிறது. வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகளுக்கான வங்கி கணக்கு நடைமுறைகள் மற்றும் நிர்வாகச் செலவு வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

