சிறார் தொடர்பான வழக்குகளில் அவர்களின் அடையாள விவரங்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடக் கூடாது என திருநெல்வேலி மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015-ன் பிரிவு 74-ன் படி, சிறார்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட அடையாள விவரங்களை வெளியிடுவது சட்டவிரோதம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் சமூக வலைதளப் பதிவு தொடர்பாக பள்ளி மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் நீதி குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிறார்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


