விஜயவாடாவில் செப்.29, 30-ல் முதல் பயிலரங்கம்: தமிழகம் உள்ளிட்ட 7 மாநில அதிகாரிகள் பங்கேற்பு
மத்திய அரசின் மிஷன் கர்மயோகி (கர்மயோகி இயக்கம்) திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் வகையில், பயிற்சி நிறுவனங்களை திறன் மேம்பாட்டு நிறுவனங்களாக மாற்றும் நோக்கில் திறன் மேம்பாட்டு ஆணையம் சார்பில் மண்டல கலந்தாய்வுப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
இதன் முதல் மண்டலப் பயிலரங்கம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் வரும் செப்டம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இந்தப் பயிலரங்கில் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.
விஜயவாடா பயிலரங்கில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அரசு அதிகாரிகள், பயிற்சி நிறுவனத் தலைவர்கள், பேராசிரியர்கள், துறை நிபுணர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பயிற்சி நிறுவனங்களின் நிறுவன ஆளுகை, தலைமைத்துவ மேம்பாடு, செயல்பாட்டுத் திறன், புதிய தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்தப் பயிலரங்கில் ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சாதனா சப்தா 2026 நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த மண்டலப் பயிலரங்குகள் நடத்தப்படுகின்றன.
விஜயவாடா பயிலரங்கத்துக்குப் பிறகு, நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு, மாநில பயிற்சி நிறுவனங்களை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என திறன் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

