தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து முறைகேடு செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch ) போலீசார் முன்பு இன்று ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருதல், பள்ளிகளை தரம் உயர்த்துதல், கட்டிட அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, 177-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (Central Crime Branch ) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் பி.டி. அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வழக்கில் அன்பில் மகேஸ் பெயரும் சேர்க்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 16-ஆம் தேதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸுக்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் CCB போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வழக்கு தொடர்பானதாகக் கூறப்படும் ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், காசோலைகள் மற்றும் சில மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தகவல்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க செப்டம்பர் 18-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அன்பில் மகேஸுக்கு CCB போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி அவர் இன்று சென்னை CCB அலுவலகத்தில் ஆஜராகி, விசாரணை அதிகாரிகள் முன்பு தனது விளக்கங்களை அளித்தார்.
இதுகுறித்து அன்பில் மகேஸ் தரப்பில், தனது அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடர்பான ஆவணங்களே போலீசாரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அடுத்தகட்டமாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி விவரங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் CCB போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


