தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற மாநில அளவிலான பெருந்திரள் விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதலமைச்சர் தலைமை வகித்தார். இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாணவர்கள் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு தூதர்களாக செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

போதை, புகையிலையில்லா வளாகம் பிரச்சாரம் தொடக்கம்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்” என்ற சிறப்பு பிரச்சாரத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், மாநிலம் முழுவதும் காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத புகையிலைப் பொருள்கள் பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் நடவடிக்கைகளையும் காணொலி காட்சி மூலம் பார்வையிட்டார்.

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பதக்கம்

போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் பணியாளர்களுக்கு 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சரின் சிறப்பு பணி காவல் பதக்கங்களை முதலமைச்சர் வழங்கினார்.

போதை எதிர்ப்பு மன்றங்களுக்கு பாராட்டு

பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பணிகளில் சிறந்து விளங்கிய 3 சிறந்த போதை எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் 3 சிறந்த தன்னார்வலர் குழுக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுக் கோப்பைகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version