திருப்பூரில் இயக்கப்படும் மினி பஸ்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் இணைந்து கூட்டுத் தணிக்கை மற்றும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் , மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள குமரன் கல்லூரி பகுதியில் தினமும் மாலை 3 மணி அளவில் பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் விதிமுறைகளை மீறி சாலையிலேயே நிறுத்தப்படுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
மேலும், அரசு இலவச பேருந்துகளைப் பயன்படுத்த காத்திருக்கும் மாணவ-மாணவிகளை மினி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தங்கள் பேருந்துகளில் ஏறுமாறு வற்புறுத்துவதாகவும், இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாலை 3.00, 3.10 மற்றும் 3.20 மணிக்கு இயக்கப்பட வேண்டிய அரசு டவுன் பேருந்துகள் முறையாக வராததால், இலவசப் பேருந்து வசதியைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் கட்டாயமாக மினி பஸ்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான மினி பஸ்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி வழித்தடங்களில் இயங்காமல், மத்திய பேருந்து நிலையம், கோவில் வழி மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மட்டுமே தொடர்ந்து இயக்கப்படுவதால், உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உரிய மினி பஸ் சேவை கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்வதாகவும், பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவல்துறை, வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறை இணைந்து மினி பஸ்களில் கட்டண விவரங்கள் மற்றும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தொடர்பான தகவல் பலகைகளை கட்டாயமாக காட்சிப்படுத்தச் செய்ய வேண்டும். மேலும், விதிமீறலில் ஈடுபடும் மினி பஸ்கள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.


