ஆய்வு மாணவர் பாரதிதாசன், அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை தொடர்பாக அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டுள்ள அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்றும், அதில் அடிப்படை புரிதலற்ற சில வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகையின் கீழ் 181 மாணவர்கள் பயிலும் நிலையில், தமக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், அந்த 181 பேரில் பாரதிதாசன் மட்டுமே ஆராய்ச்சி மாணவர் என்றும், மற்றவர்கள் முதுநிலை போன்ற மேற்படிப்புகளில் பயிலும் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Invoice-க்கு பதிலாக Quotation சமர்ப்பித்ததாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. செலவு செய்வதற்கு முன் எதிர்பார்க்கப்படும் செலவுக்கான மதிப்பீடாக Quotation வழங்கப்படுவதும், செலவு மேற்கொண்ட பின்னர் அதற்கான தொகையை கோருவதற்கான ஆவணமாக Invoice/Bill வழங்கப்படுவதும் அடிப்படை நடைமுறை என பாரதிதாசன் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, இரண்டாம் ஆண்டுக்கான Enrolment Letter-ஐ மார்ச் 24-ஆம் தேதியே மாணவர் சமர்ப்பித்ததாகவும், முதலாம் ஆண்டுக்கான Bill-ஐ ஏப்ரல் 21-ஆம் தேதி அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27-ஆம் தேதி சில விளக்கங்கள் கேட்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 30-ஆம் தேதி மாணவர் அதற்கான விளக்கத்தை அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து விடுபட்டிருந்த சில ஆவணங்களையும் இணைத்து, முதலாம் ஆண்டுக்கான ரூ.36 லட்சம் தொகைக்கான முழுமையான Bill-ஐ ஜூன் 8-ஆம் தேதி சமர்ப்பித்ததாகவும் மாணவர் தரப்பு தெரிவித்துள்ளது. அப்போது தற்போதைய அரசு ஆட்சிக்கு வரவில்லை என்றும், அமைச்சர் வன்னி அரசு மே 22-ஆம் தேதிதான் பதவியேற்றதாகவும் அந்தத் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டுக்கான கல்வி நிதி தொடர்பான Quotation-ஐ ஜூன் 29-ஆம் தேதி மாணவர் சமர்ப்பித்ததாகவும், தொடர்ந்து வாரந்தோறும் Follow-up மின்னஞ்சல்கள் அனுப்பியபோதிலும் நடவடிக்கை எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமைச்சர் வன்னி அரசை மாணவர் பாரதிதாசன் சார்பில் சக நண்பர்கள் இருமுறை சந்தித்ததாகவும், அப்போது “Follow செய்கிறேன்; உடனடியாக பணம் Sanction ஆகிவிடும்; கவலை வேண்டாம்” என அமைச்சர் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ஆம் தேதி மன உளைச்சலில் இருப்பதாக மாணவர் வீடியோ வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆகஸ்ட் 19-ஆம் தேதி சமூகநீதி துறை பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாணவர் கூடுதல் தொகை பெறுவதற்காக உரிய ஆவணங்களை ஒப்படைக்காமல் பொய் கூறுவதாக குற்றம்சாட்டப்பட்டதாக பாரதிதாசன் தரப்பு கூறுகிறது. மறுநாளே அந்தக் குற்றச்சாட்டு சட்டப்பேரவையிலும் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஆகஸ்ட் 25-ஆம் தேதி சட்டப்பேரவையில் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கேள்வி எழுப்பியபோது, “மாணவரிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம்” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்ததாக அந்தத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாணவரிடம், முதலாம் கல்வியாண்டில் செலவிடப்பட்ட ரூ.8 லட்சம் தொகை ஆய்வுப் பணிக்காகத்தான் பயன்படுத்தப்பட்டதா என்பதை ஆவணங்கள் மூலம் பல்கலைக்கழகத்திடம் உறுதி செய்து, பதிவாளர் கையெழுத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுப் பணிக்கான செலவுக்கும் பல்கலைக்கழகப் பதிவாளருக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியையும் மாணவர் தரப்பு எழுப்பியுள்ளது.
இருப்பினும், அமைச்சகத்தின் கோரிக்கைக்கு இணங்க, பல்கலைக்கழகத்தின் சம்பந்தப்பட்ட அலுவலர்களை அணுகி, தேவையான ஆவணங்கள் மற்றும் பதிவாளர் கையெழுத்துடன் கூடிய விளக்கத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாணவர் சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாணவரிடமிருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என தற்போது சமூகநீதி துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது என பாரதிதாசன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 26-ஆம் தேதி மாணவர் பல்கலைக்கழகம் வழியாக சமர்ப்பித்த விளக்கத்தை கருத்தில் கொள்ளாமல், செப்டம்பர் 17-ஆம் தேதி இரண்டாம் ஆண்டுக்கான Quotation தொடர்பாக பல்கலைக்கழகத்திடமே புதிதாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“பணம் ஆய்வுக்காகத்தான் செலவிடப்படுகிறது என்பதை உறுதிப்படுத்துவதுதான் அரசின் நோக்கம் என்றால், அதற்கான ஆவணங்களைப் பதிவாளர் கையெழுத்துடன் ஆகஸ்ட் 26-ஆம் தேதியே மாணவர் சமர்ப்பித்துள்ளார். பின்னர் ஏன் மாணவரை குற்றம்சாட்டும் வகையில் பல்கலைக்கழகத்திடம் அரசு தனியாக விளக்கம் கேட்டது?” என மாணவர் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், அரசு தரப்பிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பின்னர், மாணவரின் ஆய்வுப் பணியின் முன்னேற்றம் தொடர்பாக பல்கலைக்கழகத்திலும் கேள்விகள் எழுந்ததாகவும், இதனால் மாணவர் கூடுதல் மன அழுத்தத்திற்கு உள்ளானதாகவும் அந்தத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும், அரசு மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற மின்னஞ்சல் பரிமாற்றங்களையும் முழுமையாக வெளியிட்டு, உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே பாரதிதாசன் தரப்பின் கோரிக்கையாக உள்ளது.

