மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் கண்மாயில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள கட்டக்குளம் கண்மாய், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது கடும் வெப்பம் காரணமாக கண்மாய் வறண்டு காணப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கோச்சடை எம்.எம்.டி. வாலிபால் அசோசியேஷன் சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெடுங்குளம் முன்னாள் ஊராட்சித் தலைவரும், கண்மாய்கள் பாதுகாப்பு ஆர்வலருமான பிச்சைமணி தலைமை வகித்தார். வாலிபால் அசோசியேஷன் தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.
டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான பனை விதைகள், கண்மாயின் சுமார் 2 கிலோமீட்டர் நீளமுள்ள கரைப் பகுதியில் ஆங்காங்கே கொண்டு செல்லப்பட்டு குவிக்கப்பட்டன.
தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து கண்மாய்க் கரையில் சுமார் 2 அடி ஆழத்தில் குழிகள் தோண்டி பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.
பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அவற்றின் அழிவைத் தடுக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் இயற்கை வளப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவவும் வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இந்த முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


