குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு, கோளரங்கம், ஹாலோகிராம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு குன்னூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சாணில் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை சிவசக்தி முன்னிலை வகித்தார்.
உபதலை சாய் நிவாஸ் அறக்கட்டளை சார்பில் பங்கேற்ற நிர்வாகி சாய்ராம், ஏழை மாணவர்களின் கல்விக்குத் தேவையான உதவிகளை வழங்க தங்கள் நிறுவனம் எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
சிறப்பு கருத்தாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் கே.ஜே. ராஜு, மாணவர்களிடையே பேசியதாவது:
முன்பு உடல் உழைப்பு செல்வமாகக் கருதப்பட்டது. பின்னர் மூளை உழைப்பைப் பயன்படுத்தியவர்கள் செல்வந்தர்களாக மாறினர். இன்றைய நவீன உலகில் உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் பின்னுக்குத் தள்ளும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.
எதிர்காலத்தில் இயந்திரங்கள் தாமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் நிலை உருவாகலாம். இதனால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சிந்திக்கும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் செல்வமும் கிடைக்கும்.
மாணவர்கள் தங்களது மூளையின் முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். படைப்பாற்றலுடன் புதிய பாதையில் சிந்திக்கப் பழக வேண்டும். மூளையின் செயல்பாடுகளைப் பாதிக்கும் போதைப் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புரியாத புத்தகங்களையும் விடாமல் படிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் மூலம் சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
குன்னூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி முதல்வர் முனைவர் பாலசுப்பிரமணியம், விரிவுரையாளர் ஜோதிலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கோளரங்கத்தை கண்டு ரசித்தனர். ஹாலோகிராம் தொழில்நுட்பம் மூலம் அப்துல் கலாம், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்திப்பது போன்ற அனுபவத்தைப் பெற்றனர்.
முன்னதாக பள்ளி முதுகலை ஆசிரியை செல்வமணி வரவேற்றார். அறிவியல் இயக்க நிர்வாகி அபு நன்றி கூறினார்.


