காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகள், போலி புகைப்படங்கள், மாஃபிங் விடியோக்கள் உள்ளிட்ட பதிவுகளை வெளியிடுவோர் மீது, அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திமுக சட்டப்பிரிவு துணைச் செயலாளர் டாக்டர் ஜி. சந்திரபோஸ் தாக்கல் செய்த மனு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவில், திமுக மற்றும் அதன் தலைவர்கள் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள், மாஃபிங் விடியோக்கள் மற்றும் தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவதாகவும், இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் 17 புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சியினருக்கு எதிரான சமூக வலைதளப் பதிவுகளில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், திமுக சார்பில் அளிக்கப்படும் புகார்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில காவல்துறை மீதான நம்பிக்கை இல்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் விளம்பர நோக்கத்திலும் மோசமான பதிவுகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். அவதூறு பதிவுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான விரிவான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (SOP) தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றை இறுதி செய்ய 2 வார கால அவகாசம் தேவை என்றும் கோரினார்.

இதையடுத்து, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிபதி, சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் களங்கப்படுத்தும் பதிவுகளை வெளியிடுவோர் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காவல்துறை பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும், இதுபோன்ற புகார்கள் பெறப்பட்டால் அவற்றை தாமதமின்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Author

  • Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Share.

Dinakkadir.com-ன் செய்தி மற்றும் ஆசிரியர் குழு. தமிழ்நாடு, இந்தியா மற்றும் முக்கிய தேசிய செய்திகளை சரிபார்த்து வாசகர்களுக்கு வழங்குகிறது.

Leave A Reply

Exit mobile version