அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெகவுக்கு வரத் தயாராக உள்ளனர்; அதிமுகவில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சி இருப்பார்கள் என்று, கோபியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசி, பரபரப்பை கிளப்பி உள்ளார்.
தவெக அரசின் 100 நாட்களை ஒட்டி தவெக பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: மக்கள் விரும்பிய அரசியல் மாற்றமாகத் தவெக உருவெடுத்துள்ளது. வரும் காலத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராவார்.
தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகளான திமுக, அதிமுக இரண்டுமே தங்களது செல்வாக்கை இழந்து தடுமாற்றத்தில் உள்ளன. குறிப்பாக அதிமுக மிகவும் பலவீனமாக உள்ளது. ஏற்கனவே அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டனர்.
மேலும் பல அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராக உள்ளனர். அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து வெளியேறக் காத்திருக்கிறார்கள். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் இன்னும் 10 எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணையத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படிவம் கைக்கு வந்ததும் அந்த 10 பேரும் முறைப்படி விலகித் தவெகவில் இணைந்து விடுவார்கள். அதுமட்டுமின்றி, மொத்தமாக 25 எம்.எல்.ஏ.க்கள் ஒரே நேரத்தில் தவெகவுக்கு வரத் தயாராகிவிட்டனர். இவை அனைத்தும் நடக்கும் போதுதான் அதிமுக தலைமைக்கு நிலைமையின் தீவிரம் புரியவரும்
தமிழக அரசியலில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து தடுமாறி வருகின்றன. வடதுருவமும் தென்துருவமும் போல செயல்பட்ட இரு கட்சிகளும் இன்று கூட்டணி வைக்கலாமா என்ற யோசனைக்கு வரும் அளவுக்குப் பலவீனமடைந்துள்ளன. இது தொண்டர்களுக்குச் செய்யப்படும் பச்சை துரோகம்.
திமுக மற்றும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் கற்பனை உலகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. எதிர்காலத்தில் சில கட்சிகளில் வெறும் தலைவர்கள் மட்டுமே மிஞ்சுவார்களே தவிர, தொண்டர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

