மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்றுவதற்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திருப்பரங்குன்றம் ‘தீபத் தூணில்’ விளக்கு ஏற்ற அனுமதி அளித்த உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. இம்மனுவை விசாரித்தபோது, உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு ஏன் மேல்முறையீடு செய்யப்படுகிறது என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இன்று (ஆகஸ்ட் 3, 2026) நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிர்வாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இதுகுறித்து, திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மனுதாரரும் ‘இந்து தமிழர் கட்சி’யின் நிறுவனத் தலைவருமான ராம ரவிக்குமார் கூறியதாவது:
“உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தற்போதைய நிலை மாறாமல் தொடர்கிறது.”