திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர் அருகிலுள்ள தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டிருந்ததாக எழுந்த புகாரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கமாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள ‘சின்டெக்ஸ்’ (Sintex) குடிநீர்த் தொட்டியை ஆய்வு செய்தபோது, ​​அதனுள் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட நிலையில் மனித மலம் இருப்பது கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அந்தப் பைக்குள் அடையாளம் தெரியாத நபர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எச்சரிக்கை வாசகம் அடங்கிய காகிதத் துண்டு ஒன்றும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனடியாகப் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், விசாரணையை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவத்தின் பின்னணி, இதில் தொடர்புடைய நபர்கள் மற்றும் இச்செயலுக்கான நோக்கம் ஆகியவை குறித்துக் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version