ஒரு அரசு அதிகாரி நினைத்தால் நீதிமன்ற உத்தரவையே குப்பையில் வீசலாம், ₹100 கோடி சொத்தை வெறும் ₹2 கோடிக்குத் தாரைவார்க்கலாம் என்பதைப் பழனியில் அரங்கேறியுள்ள “தண்டபாணி சுவாமி மடம்” நில மோசடி விவகாரம் அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது.
ஆன்மிக பூமியான பழனியில், ‘பினாமி’ என்ற பகடைக்காயை வைத்துக்கொண்டு அதிகார வர்க்கமும், அரசியல் மாஃபியாக்களும் எப்படி கூட்டுச்சதி செய்து கோவில் நிலத்தை விழுங்கப் பார்த்தார்கள் என்ற முழு விவரம் இதோ:
பழனி மலை அடிவாரம் பூங்கா ரோட்டில், கோவிலுக்குச் சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ₹100 கோடி. நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த நிலத்தின் ‘தக்கார்’ ஆக பழனி கோவில் இணை ஆணையரே செயல்பட்டு வருகிறார்.
- லீவ் போட்ட அதிகாரி… லீடு கொடுத்த மோசடி: வழக்கமாக அந்தப் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர், இந்த நிலத்தைப் பதிவு செய்யக்கூடாது என்று கறாராக மறுத்து ‘ரெஃப்யூசல் ஸ்லிப்’ (Refusal Slip) கொடுத்திருந்தார்.
- சமயம் பார்த்துக் காத்திருந்த நரிகள்: அவர் விடுமுறையில் சென்ற ஒரு குறிப்பிட்ட நாளைப் பார்த்து (ஜூலை 6) ஸ்கெட்ச் போடப்பட்டது. பொறுப்பு சார்பதிவாளராக வந்த கொடைக்கானல் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முன்னால் இருந்த எச்சரிக்கைக் கடிதங்களை ‘அப்படியே’ மறைத்துவிட்டு, ₹100 கோடி நிலத்தை வெறும் ₹2 கோடி என மதிப்பிட்டு, சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்து முடித்தார்!
இந்த மோசடிப் பத்திரத்தில் நிலத்தை வாங்கியவர்களாகக் காட்டப்பட்டுள்ள பெயர்கள்: வெள்ளத்துரை (திருப்பூர் பாப்பன்குளம்) மற்றும் சேதுபதி (பழனி டி.கே.என்.புதூர்). நிலத்தை விற்றவர் விழுப்புரத்தைச் சேர்ந்த முருகதாஸ் சாமிகள்.
- பார்ப்பதற்கு மிகவும் பரதேசி போலவோ, அனாதை போலவோ இருக்கும் ஒரு எளிய நபரின் புகைப்படத்தை ஆவணங்களில் (Trustee என்ற பெயரில்) இணைத்துள்ளனர். நாளைக்குச் சட்டம் பாய்ந்தால், “பணம் கொடுத்தாங்க, கையேழுத்து போட்டேன்” என்று இந்த அப்பாவியைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, உண்மையான திமிங்கிலங்கள் தப்பித்துக் கொள்ளவே இந்த ‘ஏழை’ வேடம்.
- இந்த மோசடியின் பின்னணியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உறவினர்கள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. (அமைச்சர் இதைத் தீவிரமாக மறுத்து வந்தாலும், சந்தேகங்கள் வலுவாகவே உள்ளன).
“அரசாங்கத்தை ஏமாற்றலாம், ஆனா அந்தப் பழனி ஆண்டவனை ஏமாற்ற முடியுமா?” என்பது போல, இந்த மோசடி அம்பலமானதும் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நடந்து வருகின்றன:
- நீதிமன்றம் அதிரடி ரத்து: பழனி கோவில் நிர்வாகம் உடனடியாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையை நாடியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த ₹100 கோடி நிலப் பத்திரப்பதிவு முற்றிலும் செல்லாது” என்று அதிரடி தீர்ப்பளித்து, நிலத்தை மீட்டனர்.
- அதிகாரிகள் சஸ்பெண்ட்: முறேகடாகப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய இருவரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர்.
- சிபிசிஐடி (CBCID) எண்ட்ரி – மூவர் தலைமறைவு: இந்த விவகாரம் சாதாரண போலீசாரிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் வருவதை மோப்பம் பிடித்த நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய மூன்று முக்கியக் குற்றவாளிகளும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் பிடிக்கத் தனிப்படை தேடி வருகிறது. “ஒரு ஏழை விவசாயி தன் சொந்த நிலத்தைப் பட்டா மாத்தணும்னாலே ஆபீஸை நூறு தரம் நடக்க வைப்பாங்க. ஆனா, 100 கோடி கோவில் நிலத்தை, ஒரு லீவு நாள்ல, 2 கோடிக்கு முடிச்சுக்கொடுக்க அதிகாரிகளுக்கு எவ்வளவு பெரிய ‘பெருந்தன்மை’ பாத்தீங்களா? பாவம்… பினாமி வேடம் போட்டுட்டு இப்பப் பதுங்கிப் பதுங்கி ஓடுறாங்க. மாட்டுனா… ஜெயில் கஞ்சிதான்!”

