முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மேலும் ஒரு புதிய நெருக்கடியாக, டிரான்ஸ்பார்மர் கொள்முதல் டெண்டர் முறைகேடு புகாரில் சிபிஐ (CBI) தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் செந்தில்பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தபோது, மின் வாரியத்திற்கு டிரான்ஸ்பார்மர்கள் (மின்மாற்றிகள்) கொள்முதல் செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. சந்தை மதிப்பை விட கூடுதல் விலைக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.397 கோடி நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த முறைகேடு தொடர்பாகப் பல்வேறு தரப்பிலிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) தற்போது இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அரசுப் பணத்தைக் கையாடல் செய்தல் மற்றும் முறைகேடான டெண்டர் ஒதுக்கீடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி மற்றும் மின் வாரிய அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே அமலாக்கத்துறையின் (ED) பணமோசடி வழக்கில் சிக்கிப் பல்வேறு சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு வரும் செந்தில்பாலாஜிக்கு, தற்போது சிபிஐ அமைப்பும் புதிய வழக்கைப்பதிவு செய்திருப்பது அவரது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, சிபிஐ அதிகாரிகள் விரைவில் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதன நடத்தவும், மின் வாரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் செந்தில்பாலாஜியைச் சுற்றியுள்ள சட்டப் பிடி மேலும் இறுகத் தொடங்கியுள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version