காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என்றும், கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க ஆணையர் அமுதவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்களை பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அதிகளவில் மக்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், எந்தவொரு மதச்சார்புள்ள வளாகத்திலும் கிராம சபை கூட்டங்களை நடத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவு
கிராம சபை கூட்டம் நிறைவடைந்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் இரண்டு நாள்களுக்குள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் (TNRD) இணையதளத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய செயலி அறிமுகம்
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கூட்டத்தின் விவரங்கள், தீர்மானங்கள் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளவும், பொதுமக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யவும் ‘குடிமக்கள் பங்கேற்பு செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய திட்டங்கள் குறித்து விவாதம்
கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், குடிநீர் விநியோகம், சிறு பாசனக் குளங்கள் மற்றும் ஏரிகள் பராமரிப்பு, ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம சபையில் விவாதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையில் சர்ச்சை
ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் “காந்தி ஜெயந்திக்கு பதிலாக சுதந்திர தினம்” என குறிப்பிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தும் நடைமுறையில் மாற்றம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


