செவ்வாய் கிழமையில் வரும் இன்றைய பிரதோஷம், பெளம பிரதோஷம் அல்லது அங்காரக பிரதோஷம் என்பார்கள். இதன் சிறப்பு என்ன? இன்று சிவாலயங்களுக்கு செல்வதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

பொதுவாக பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபடுவதற்கு உரிய மிக மகத்தான மற்றும் சக்திவாய்ந்த காலமாகும். சமஸ்கிருதத்தில் “தோஷம்” என்றால் குற்றம் அல்லது பாவம் என்று பொருள்; “பிர” என்றால் நீக்குவது. நம் பாவங்களை நீக்கி நல்வாழ்வு தரும் அற்புத நாளே பிரதோஷம்.

பிரதோஷத்தின் முக்கிய சிறப்புகள்

சுழற்சி முறையில் வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானை தரிசிப்பது, ஆயிரம் ஆண்டுகள் செய்த பாவங்களையும், பிரம்மஹத்தி போன்ற கொடிய தோஷங்களையும் போக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷ நேரத்தில் (மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) சிவபெருமானின் வாகனமான நந்திகேஸ்வரரின் கொம்புகளுக்கு இடையே சிவன் பார்வதியோடு நிருத்தம் (நடனம்) புரிகிறார்.

அதனால்தான், நந்தி தேவருக்கு அருகம்புல், சந்தனம், காப்பரிசி சாற்றி வழிபட நன்மைகள் பெருகும். இந்த நேரத்தில் செய்யப்படும் வழிபாடு, தியானம் மற்றும் ஜபம் சாதாரண நாட்களை விட ஆயிரம் மடங்கு அதிக பலனைத் தரும்.

செவ்வாய் பிரதோஷத்தின் மகிமை

செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் “பௌம பிரதோஷம்” என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கு “பௌமன்” என்ற பெயரும் உண்டு. செவ்வாயை அங்காரகன் என்பார்கள். எனவே, அங்காரக பிரதோஷம் என்பார்கள். செவ்வாய்க்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தின் அதிபதியான சுப்பிரமணியரையும் (முருகன்) பிரதோஷ நாளான இந்த நாளில் வழிபடுவது இரட்டிப்புப் பலன்களைத் தரும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடை நீங்கவும், சுகப்பிரசவம் ஆகவும் பௌம பிரதோஷத்தன்று சிவன் மற்றும் நந்தி தேவருக்கு சிவப்புக் கயிறு, சிகப்பு நிற மலர்கள் (அரளி) சாற்றி வழிபடுவது சிறந்த நிவாரணத்தைத் தரும்.

கடன் பிரச்சினை, வழக்குகள் அகலும்

தீராத கடன் பிரச்சனை, பணத் தட்டுப்பாடால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் சிவபெருமானை வணங்கி, பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றால் கடன் சுமை படிப்படியாகக் குறையும். நிலம், வீடு தொடர்பான பிரச்சனைகள், வழக்குகள் அகலும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

செவ்வாய் பிரதோஷ நாளில் சிவன், நந்தி வழிபாட்டின் மூலம் எதிரிகளின் சதி, பயம், மற்றும் கோப உணர்வுகள் நீங்கி மனோபலம், தைரியம் மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் பிரதோஷத்தன்று சிவபெருமானையும், நந்தி தேவரையும், முருகப்பெருமானையும் சேர்த்து மனதார வழிபட்டு கடன் மற்றும் தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறுவோம்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version