சர்க்கரையைத் தொடர்ந்து பெரிய வெங்காயம் விலையும் கிடுகிடுவென உயரத் தொடங்கி உள்ளது. ஒரு வாரத்தில் அதன் விலை சுமார் 35% வரை அதிகரித்துள்ளது.

நமது சமையலில் வெங்காயம் மிக அத்தியாவசியமான பொருள். வெங்காயம், தக்காளி உள்ளிட்டவை இல்லாமல் நமது சமையல் நிறைவடைவதில்லை. மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள், வெங்காய உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. ஆனால் சமீபத்தில் காலம் தவறி பெய்த கனமழையால் வெங்காயம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் ராபி பருவ சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், அதன் தாக்கம் தற்போது சந்தையில் எதிரொலிக்கிறது. வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, சந்தைகளுக்கு வரும் அதன் அளவும் கணிசமாக குறைந்துள்ளது.

இதனால், நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டின் முக்கிய மொத்த விற்பனை சந்தைகளில் வெங்காயத்தின் விலை, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த வார தொடக்கத்தில் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்ட வெங்காயம், தற்போது சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் ரூ.65 வரை சென்றுள்ளது.

தற்போதைய விலை உயர்வு, அக்டோபர் இறுதி வரை நீடிக்கும் என்று வியாபாரிகள் கருதுகின்றனர். அடுத்த பருவத்துக்கான அறுவடை தொடங்கி, புதியதாக வெங்காயம் சந்தைக்கு வரும்போதுதான் விலை ஓரளவுக்கு குறைய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கிலிருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவகாத்தி உள்ளிட்ட நகரங்களுக்கு வெங்காயத்தை விரைவாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக ரயில் இயக்கப்படுகிறது.

அரிசி, சர்க்கரையை தொடர்ந்து தற்போது வெங்காயத்தின் விலையும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கி இருப்பது, ஏழை, நடுத்தர மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version