திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் ஆதார் அட்டை திருத்தங்கள் மற்றும் புதிய பதிவுகளுக்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வரும் பொதுமக்களுக்கு போதிய வசதிகள் இல்லாததால், வயதானவர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட நேரம் தரையிலேயே அமர்ந்திருக்க வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் தரையில் அமரவும் முடியாமல், நீண்ட நேரம் நிற்கவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இப்பிரச்சினை குறித்து இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், வாய்மொழியாக முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட ஆட்சியராவது இந்த அவல நிலைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் மையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நிழற்குடை மற்றும் போதிய இருக்கை வசதிகளை விரைந்து அமைத்துத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

