சர்வதேச யோகா தினம் வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களிடம் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பாக, ஜூன் 8-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் “யோகாவின் மூலம் ஆரோக்கியமான முதுமை” என்ற சிறப்பான கருப்பொருளை (Theme) மையமாகக் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிலையங்கள் மூலமாகப் பொதுமக்களுக்குத் தொடர் யோகா விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று (10.06.2026), நத்தம் TNSTC பணிமனையில் பணிபுரியும் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்குச் சிறப்பு யோகா பயிற்சி மற்றும் இயற்கை உணவு குறித்த ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமும் அதிக மன அழுத்தத்துடனும், நீண்ட நேரப் பயணங்களிலும் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் நோக்கில் இம்முகாம் அமைந்தது.

இந்நிகழ்ச்சியினை திண்டுக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் திரு. சிவகுமார் அவர்கள் மற்றும் யோகா தின விழா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் தேவராஜ் அவர்கள் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

  • ஜி.டி.என் (GTN) இயற்கை மருத்துவக் கல்லூரி ஆசிரியை Dr. தீப்திகா அவர்கள் முகாமில் கலந்துகொண்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு எளிய முறை யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான முதுமைக்கான இயற்கை உணவு முறைகள் குறித்துப் நேரடிப் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்ச்சியான பணிச்சுமைக்கு இடையே தங்களுக்கு வழங்கப்பட்ட இந்த யோகா பயிற்சி மற்றும் உணவு ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகப் போக்குவரத்து ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version