வேலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் பள்ளிகளின் வாகனங்களுக்கான வருடாந்திர ஆய்வு மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது.

பேருந்துகளை ஆய்வு செய்து பின்னர் மருத்துவ முகாமை
மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலெட்சுமி துவக்கி வைத்தார்.
அப்போது பேருந்துகளில் ஏறி அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை ஆய்வு செய்து ஓட்டுநர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் பேருந்துகளில் திடீர் தீ விபத்துக்கள் ஏற்பட்டால்
அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை
குறித்து மாவட்ட ஆட்சியரின் முன்பு ஓட்டுநர்களுக்கு செயல் முறையுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தரராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்,
பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு தணிக்கை மற்றும் ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து வருவாய் கோட்டாட்சியர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலரின் ஒருங்கிணைப்பில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 141 பள்ளிகளைச் சேர்ந்த 990 வாகனங்கள் அரசின் 2012ஆம் ஆண்டு பள்ளி வாகன விதிகளின்படி அனைத்து வசதிகளுடன் சரியாக உள்ளதா? என்பது குறித்து செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மேலும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்காக தனியார் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம், தீயணைப்புத் துறையினரால் தீ பாதுகாப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்கக் கூட்டமும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது.

விதிமீறல் மற்றும் தகுதியில்லா பள்ளிகள் மீது நடவடிக்கை
அங்கீகாரமில்லாத பள்ளிகள் இயங்குவது குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தால், அது குறித்து உடனடியாக தனியார் பள்ளிகளுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) மூலமாக ஆய்வு செய்யப்படும். மேலும், சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தைத் தொடர்பு கொண்டு, உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுக்கப்படும்.

காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதாகவும், அவை அதிவேகமாக இயக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இரு கட்டங்களாக நடவடிக்கை எடுக்கவுள்ளது. பள்ளி வாகனங்கள் அனைத்தும் விதிமுறைப்படி இயங்குவதை உறுதி செய்ய அனைத்து பள்ளி நிர்வாகிகளுடனும் இந்த குழுவின் சார்பில் கூட்டம் நடத்தப்படும்.

மேலும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தனியார் வாகனங்களில் அனுப்பும்போது, அதில் அளவுக்கு அதிகமாகக் குழந்தைகள் ஏற்றப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு பள்ளி நிர்வாகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அடுத்த வாரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஷேர் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநர்களின் கூட்டுக் கூட்டம் நடத்தப்படும்.

ஒரு வாகனத்தில் எத்தனை நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதி உள்ளதோ, அத்தனை பேரை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும், விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் எச்சரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version