தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு துருவங்களின் தேர்தல் பின்னடைவு என்பது வெறும் தோல்வி மட்டுமல்ல; அது பல தசாப்தங்களாக அவர்கள் கட்டமைத்து வைத்திருந்த “அசைக்க முடியாத பிம்பத்திற்கு” மக்கள் கொடுத்திருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. அரசியலில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், இந்தத் தோல்விக்குப் பின்னால் இருக்கும் மக்களின் குமுறல்களையும், எதார்த்தங்களையும் கட்சிகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதிகார மமதையும் அலட்சியப்படுத்தப்பட்ட போராட்டங்களும்
ஆட்சிக் கட்டிலில் இருந்த திமுகவிற்கு எதிராக செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பல தரப்பினர் வீதியில் இறங்கிப் போராடினர். ஆனால், தங்களின் ஊடக பலமும் அதிகார பலமும் இந்தப் போராட்டங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. “இல்லாத திராவிடத்தை” தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, “திராவிட மாடல் 2.0” என்ற பிம்பத்தை கட்டமைப்பதிலேயே குறியாக இருந்த ஆட்சியாளர்கள், சாமானிய மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களைச் செவிமடுக்கத் தவறினர்.
கஞ்சா புழக்கம், கள்ளச்சாராயச் சாவுகள், கனிம வளக் கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தலைவிரித்தாடிய போது, பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் அதிகாரத்தின் காதுகளுக்கு எட்டவே இல்லை.
அதிமுகவின் செயலற்ற காத்திருப்பும் மக்களின் மாற்றும்
மறுபுறம், ஒரு ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அதிமுக, “திமுக மீதான கோபத்தில் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்” என்ற அதீத நம்பிக்கையில் முடங்கிக் கிடந்தது. மக்களின் துயரங்களில் தோள் கொடுக்கத் தவறிய அதிமுக, தேர்தல் நேரத்தில் செய்த பிரச்சாரங்கள் மக்களைச் சென்றடைந்தாலும், அவை வாக்குகளாக மாறவில்லை. “கஷ்ட காலத்தில் கூட நிற்காதவர்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள்?” என்ற மக்களின் கேள்விக்கு அதிமுகவிடம் பதில் இல்லை.
நாம் தமிழர் மற்றும் தவெக: கள அரசியலும் தேர்தல் அரசியலும்
மக்களின் அத்தனைப் பிரச்சினைகளிலும் களத்தில் நின்றது ‘நாம் தமிழர் கட்சி’ என்றாலும், தேர்தல் அரசியலுக்கு ஏற்பத் தங்களை வடிவமைத்துக் கொள்வதில் அவர்கள் இன்னும் தடுமாறுகிறார்கள். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவமும், தரம் தாழ்ந்த சொற்களைத் தவிர்க்கும் பண்பும் அவர்களுக்கு அவசியமாகிறது.
இதே சூழலில், பிரதான கட்சிகள் மீதான கடும் அதிருப்தியால் மக்கள் ஒரு மாற்றைத் தேடினர். அதன் விளைவாகவே, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் கொங்கு மண்டல விவசாயிகளும், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களின் விளிம்பு நிலை மக்களும் ஒட்டுமொத்தமாக ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ (தவெக) நோக்கிச் சாய்ந்துள்ளனர். இது பணம் மட்டுமே ஜனநாயகத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதற்கான சான்று.
கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டியவை:
* பணம் = வாக்கு என்ற எண்ணம்: பணம் கொடுத்தால் மக்கள் வாக்களிப்பார்கள், இலவசங்களுக்குப் பின்னால் அணிவகுப்பார்கள் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும்.
* இளைஞர்களுக்கான வாய்ப்பு: இளைஞர்களுக்குப் பதவி கொடுத்தால் மட்டும் போதாது, அவர்களைச் சரியான முறையில் அரசியல் படுத்தி வழிநடத்த வேண்டும்.
* ஜால்ராக்களின் ஆதிக்கம்: கூடவே இருந்து “பில்டப்” கொடுக்கும் ஜால்ராக்களைத் தவிர்த்துவிட்டு, மக்களின் உண்மையான மனநிலையைச் சொல்லும் நேர்மையானவர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தவர் கொடுத்த வாக்குறுதியைக் கேள்வி கேட்பதற்கு முன்பு, தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோமா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
வாடகை வாய்களை நம்பி மக்களை விட்டு அந்நியப்பட்டு நின்றால், எவ்வளவு பெரிய பாரம்பரியமிக்கக் கட்சியும் மண்ணைக் கவ்வும் என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு பாடம். மக்கள் இப்போது விழிப்புடன் இருக்கிறார்கள். இனியாவது திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய பாணியை மாற்றிக்கொண்டு, மக்களின் கஷ்டங்களை உணர்ந்து செயல்படாவிட்டால், தமிழக அரசியலில் புதிய சக்திகளின் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது.
