ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்ததாக எழுந்த புகாரில், திமுக நிர்வாகி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோயில் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, சுமார் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ளதாக கூறப்படும் நிலம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை சிலர் போலி பட்டா மற்றும் போலியான தாய் ஆவணங்கள் தயாரித்து, தங்களுக்கு உரிமை இருப்பது போல காட்டி பத்திரப்பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் மீது போலி ஆவணம் தயாரித்தல், மோசடி செய்தல், சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இந்த நிலப்பதிவில் தொடர்புடைய ஆவணங்கள், பத்திரப்பதிவு நடைமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் பங்கு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு:
கோயில் நிலங்களை முறைகேடாக பதிவு செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்வதற்கு எதிராக நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பத்திரப்பதிவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.


