திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் நடத்திய விழிப்புணர்வு முகாமில், தைரியமாக முன்வந்து புகார் அளித்த 9-ஆம் வகுப்பு மாணவியின் புகாரின் பேரில், இளைஞர் ஒருவர் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் நோக்கில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில், வேடசந்தூர் டி.எஸ்.பி திருமதி. பவித்திரா மேற்பார்வையில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காசிப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில், சிங்கப்பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. சித்ரா மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தினர்.

இந்த முகாமின் போது, அப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது தாயாருடன் சென்று சிங்கப்பெண் குழுவினரைத் தனியாக சந்தித்தார். அப்போது, கூவக்காபட்டி முத்துப்பழனியூரைச் சேர்ந்த மகாமுனியின் மகன் நாகமணி என்பவர், தனது செல்போன் எண்ணிற்கு அடிக்கடி தொடர்புகொண்டு பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்து வருவதாகவும், இதனால் தனக்கு கடும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் புகார் அளித்தார்.

புகாரின் தீவிரத்தை உடனடியாக உணர்ந்த சிங்கப்பெண் அதிரடிப்படையினர், தாமதமின்றிச் செயல்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட நாகமணியைப் பிடித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், வடமதுரை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. புவனேஸ்வரி அவர்கள், நாகமணி மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகமணி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்துத் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி திரு. S. ஜெயக்குமார் கூறுகையில், “காவல்துறை நடத்தும் விழிப்புணர்வு முகாம்கள் வெறும் பிரச்சாரமாக மட்டுமில்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிப்பதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த சான்று. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், மிரட்டல்கள் குறித்து எவ்விதத் தயக்கமுமின்றி காவல்துறையையோ அல்லது சிங்கப்பெண் அதிரடிப்படையையோ அணுகிப் புகார் அளிக்கலாம். குற்றவாளிகள் மீது உறுதியான மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Author

Share.
Leave A Reply

Exit mobile version