திமுக ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகப் பதவி வகித்த எ.வ.வேலு மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை இயக்குநரகம் (DVAC) முறைப்படி ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் சென்னை, திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முன்னாள் திமுக அமைச்சர் ஒருவரை குறிவைத்து நடத்தப்படும் முதல் பெரிய லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை இதுவாகும்.

சென்னை மற்றும் திருவண்ணாமலையில் எ.வ.வேலுவின் இல்லங்கள், கல்வி நிறுவனங்களில் சோதனை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் முக்கியக் கிளையாக திண்டுக்கல் மாவட்டத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு சாலை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டங்களின் டெண்டர்களைப் பெற்ற எ.வ.வேலுவுக்கு நெருக்கமான முன்னணி ஒப்பந்ததாரர்கள் (Contractors) மற்றும் திமுக பிரமுகர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் குறிவைக்கப்பட்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னாள் அமைச்சரின் பினாமிகளாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை தனிப்படையினர் ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, முக்கியப் பாலங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் அரசு கட்டடங்கள் கட்டும் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாக ஒதுக்கீடு செய்ததில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குறிப்பாக, ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகப் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாகவும், அந்தப் பணம் பல்வேறு மாவட்டங்களில் சொத்துக்களாக முதலீடு செய்யப்பட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்க்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன.

சமீபத்தில் ஒப்பந்ததாரர்கள் சிலர் பொதுவெளியில் வைத்த புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIC) தீவிர முதற்கட்ட விசாரணை நடத்தி, எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல குழுக்களாகப் பிரிந்து சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலுவின் இல்லம் மற்றும் சென்னை அலுவலகங்கள்.திருவண்ணாமலை அவரது சொந்த இல்லம், அருணை பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள். நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள், முக்கியத் தொடர்பில் இருந்த பிரமுகர்களின் அலுவலகங்கள் மற்றும் பினாமிகளின் இடங்கள் என மாநிலம் முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நீடித்து வருகின்றன.

சோதனை நடக்கும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முக்கிய சொத்து ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள், வங்கிப் பரிவர்த்தனை மற்றும் லேப்டாப், ஹார்ட் டிஸ்க்குகள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றி தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் திமுகவின் முதன்மைக் கொறடாவாக (Chief Whip) எ.வ.வேலு பொறுப்பு வகித்து வரும் நிலையில், இந்த லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Share.
Leave A Reply

Exit mobile version